திருச்சி: ஸ்ரீரங்கத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த சந்நியாசிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக, பாஜக திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் திருமலை ஏற்பாட்டில், அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனத் தலைவர் ராமானந்தா, முசிறி திரு ஈங்கோய்மலை லலித மகிளா சமாஜ ஆசிரம தலைவர் ஸ்ரீ வித்யாம்பா ஆகியோர் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் வந்திருந்தனர்.
அவர்கள் முதலில் தெற்கு வாசலில் ரங்கா ரங்கா கோபுரத்துக்கு இடது புறம் அமர்ந்திருந்தனர். பிரதமர் மோடி காரிலிருந்தபடி, அவர்களை நோக்கி கை கூப்பி வணங்கிய படி கோயிலுக்குள் சென்று விட்டார். கோயிலில் இருந்து வரும் போது பிரதமர் சிறிது தொலைவு நடந்து சென்று, சந்நியாசிகளிடம் ஆசி வாங்கிச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் காரில் ஏறிச் சென்றுவிட்டார். இதனால், அங்கு காத்திருந்த சந்நியாசிகள், பொதுமக்கள், பாஜகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.