சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பணிகளை அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, அந்தந்த மாநில அளவில் மாநில தலைவர்கள் தலைமையில் தேர்தல் குழுக்களை அமைத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 31 பேர் கொண்ட தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ளது.
அந்த குழுவில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், மணிசங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, ஈவிகேஎஸ் இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, கே.கோபிநாத், கே.ஜெயக்குமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், ஜே.எம்.ஆருண், பீட்டர் அல்போன்ஸ், நாசே ஜெ.ராமச்சந்திரன், ராகேஷ்குமார், சி.டி.மெய்யப்பன், பெ.விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபர் திலக், மயூரா எஸ்.ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், பிரவீன் சக்கரவர்த்தி, ஆர்ம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜோய்குமார் நேற்று சென்னைவந்தார். கட்சியின் மாநில நிர்வாகிகள், வார் ரூம் பொறுப்பாளர்கள், கட்டுப்பாட்டு அறை உறுப்பினர்களுடன் இவர்இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். அழகிரி தலைமையில், அஜோய்குமார் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறை, பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது.