பூரணம் அம்மாள் 
தமிழகம்

பள்ளிக்கு சொந்த நிலத்தை கொடுத்த பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தில் விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மதுரையில் பள்ளிக்கு சொந்த நிலம் 1.52 ஏக்கரை வழங்கிய கொடிக்குளத்தைச் சேர்ந்த பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தில் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு:

கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்ற பூரணம் கொடையாக அளித்துள்ளார்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு தின விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT