சென்னை: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஜன.17-ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில்1,200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் சுமார் 3 ஆயிரம் டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இங்குசுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த சந்தைக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் காய்கறிகளை அனுப்பி வருகின்றனர்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அனைவரும் 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் இருப்பார்கள். அதனால் காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. மேலும்,லாரி ஓட்டுநர்களும், கோயம்பேடு சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்களும் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
வரும் 17-ம் தேதி காய்கறிகள் வரத்து இருக்காது என்பதால், காய்கறி சந்தைக்கு அன்று விடுமுறை விடுவது என முடிவெடுத்து இருப்பதாக கோயம்பேடு மொத்தவிற்பனை சந்தை வளாக பெரியார் காய்கறி அங்காடி அனைத்துசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர், பழச்சந்தைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.