தமிழகம்

தமிழக அரசின் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ஓய்வூதியர்களுக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்கு போனஸ் (மிகை ஊதியம்) வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2022-23-ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு போனஸ் வழங்கப்படும்.

ரூ.167.68 கோடி செலவு: இதுதவிர, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன்மூலம் அரசுக்கு ரூ.167.68 கோடி செலவு ஏற்படும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT