சென்னை தரமணியில் தீக்குளித்த இளைஞர் மணிகண்டன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்திட்டங்களை அமல்படுத்தும் காவல்துறைக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி, சென்னை தரமணியில் கார் ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்துக்கு காவலர்கள் தன்னை தரக்குறைவாக பேசி தாக்கியதால் மனமுடைந்து தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று பலியானார். அவரது மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் மணிகண்டன் மரணமடைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் மற்றும் அவர் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், சட்டதிட்டங்கள் அறிவுறுத்தப்படும்போது அதற்கான நடைமுறைகளை சரியாக பின்பற்றி அதே நேரத்தில் இத்தகைய இழப்புகள் ஏற்படாதவாறு செயல்படுத்த காவல்துறை முயல வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.