படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கோவை மாவட்டத்தில் 2023-ல் இணைப்பு சக்கர வாகனங்கள் பெற 140 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

இல.ராஜகோபால்

கோவை: ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 140-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஆண்டு தோறும் இணைப்புச் சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 80 வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு தற்போது வரை 140-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் மேலும் பலர் இத்திட்டத்தின் கீழ் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இதுவரை இரண்டு கால்கள் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்தன. நடப்பாண்டு முதல் ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கும் வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த 2022-23-ம் ஆண்டில் 80 பேருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. 2023 -24-ம் நிதியாண்டில் தற்போது வரை 140-க்கும் மேற்பட்டோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 19-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் வாகனங்களை பெற அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதால் பயனாளிகளை தேர்வு செய்ய மேலும் ஓர் ஆய்வுக் கூட்டம் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT