சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.இ.வெங்கடாசலம் நேற்று பாஜகவில் இணைந்தார். இது தொடர்பான நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழக பாஜக துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவர்கள், முன்னிலையில்முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன், அமமுகவின் பகுதிச்செயலாளர்கள் துளசி கிருஷ்ணமூர்த்தி, கே.சுப்பிரமணியன், கே.சரவணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் பேசும்போது, ``அதிமுகவில் உள்ள தலைவர்கள் தங்களை வளர்த்துக் கொள்கின்றனரே தவிர நாட்டை வளர்ப்பதில்லை. உட்கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. அதே நேரம், தமிழகத்தில் துடிப்புமிக்க எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார். அவரது கரத்தைவலுப்படுத்த வேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சி வளர என்னால் இயன்ற பணிகளைச் செய்வேன்'' என்றார். கடந்த 1974-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் எஸ்.இ.வெங்கடாசலம். இவர், 2001-2006 காலகட்டத்தில் சேலம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார்.