சென்னை: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் விளம்பர பலகை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பிரச்சினை செய்ய வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளது.
அதிகமான கூட்டம் இருக்கும் காலங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தள்ளுமுள்ளு ஏற்படாமல் தவிர்க்கவும் கூட்ட நேரத்தில் மட்டும் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய ஆலயத்தை நிர்வகிக்கும் தீட்சிதர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆலயத்துக்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
இது முழுக்க முழுக்க அறநிலையத்துறைக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் மீது உள்ள வன்மமே காரணம். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதனை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு காவல்துறையும், அரசும் ஒத்துழைக்க வேண்டும்.