பேருந்து கட்டணக் கட்டண உயர்வை பயன்களை விட, பாதிப்புகளை அதிமாக்கியிருக்கிறது. பேருந்துக் கட்டண உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, உடனே கட்டண உயர்வை அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் பினாமி அரசு அறிவித்த பேருந்து கட்டணக் கட்டண உயர்வை பயன்களை விட, பாதிப்புகளை அதிமாக்கியிருக்கிறது. பேருந்துக் கட்டண உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் தினமும் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இயக்கப்படும் 22 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகளில் தினமும் சராசரியாக 2.10 கோடி பேர் பயணம் செய்து வந்தனர். கட்டண உயர்வின் காரணமாக 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதை கைவிட்டு, தனியார் பேருந்துகள், தொடர்வண்டிகள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவற்றில் பயணம் செய்யத் தொடங்கி இருப்பது தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் கட்டண உயர்வுக்குப் பிறகு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் ரூ.38 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.28 கோடி வரை மட்டும் தான் வசூலாவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் குறைந்ததற்கான காரணங்களைக் கண்டறிய, மதுக் கடைகளுக்கு நடத்தியது போன்ற ஸ்வோட் (SWOT-Strengths, Weaknesses Opportunities, Threats- Analysis) எனப்படும் உத்தி திட்டமிடல் பகுப்பாய்வு நடத்தத் தேவையில்லை. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதைப் போன்று, அரசுப் பேருந்துகளின் வருவாய் குறைய கட்டண உயர்வு தான் காரணம் என்பது தெளிவாகத் தெரியும் போது அதுபற்றி எந்த ஆய்வும் தேவையில்லை.
கட்டண உயர்வு 10 விழுக்காட்டுக்குள் இருந்தால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், 100 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தப்பட்டால் பணக்காரர்களால் கூட ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாது. அது தான் இப்போது நடைபெற்றிருக்கிறது.
சென்னை புறநகர் தொடர்வண்டிகளில் கடற்கரை தொடர் வண்டி நிலையத்திலிருந்து கிண்டி வரை 5 ரூபாயும், தாம்பரம் வரை 10 ரூபாயும், செங்கல்பட்டு வரை அதிகபட்சமாக 20 ரூபாயும் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரணப் பேருந்துகளில் பயணம் செய்ய இதை விட 3 மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.25, ரூ.30 மட்டுமே தொடர்வண்டிக் கட்டணம். சீசன் டிக்கெட் எடுத்தால் ஒரு நாளைக்கு திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.5.50 மட்டும் தான் கட்டணம். ஆனால், சாதாரணப் பேருந்துகளில் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரூ.110 கட்டணம்.
இந்த அளவுக்கு கட்டண விகிதம் அதிகமாக இருந்தால் பயணிகள் பேருந்தில் பயணிக்க எவ்வாறு முன்வருவார்கள்? புறநகர் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டால் மாநகரப் பேருந்துகளின் வருமானம் மேலும் பல மடங்கு குறைந்து விடக்கூடும்.
வழக்கமாக அரசுப் பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளில்தான் கட்டணம் அதிகமாக இருக்கும். இப்போது அரசுப் பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளில் கட்டணம் குறைவாக உள்ளது. புறநகர் பகுதிகளில் கூட அரசுப் பேருந்துகளில் ரூ.30 ஆக இருந்த கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டிருந்தால் தனியார் பேருந்துகளில் ரூ.35 முதல் ரூ.40 வரை மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அரசுப் பேருந்துகளின் வருமானம் கணிசமாக குறைந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.
மற்றொருபுறம் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வது சாகசமாகவும், பெருந்துன்பமாகவும் உள்ளது. மழை நேரங்களில் குடை பிடித்துக் கொண்டும், காற்றுக் காலங்களில் பேருந்தின் மேற்கூரை எப்போது பிய்த்துக் கொண்டு பறக்குமோ? என்ற பதற்றத்தில் தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இதே நிலை நீடித்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடும். இது அரசுக்கும், மக்களுக்கும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் பெருந்தீமையாக முடியும்.
எனவே, உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை சீரமைத்தும், காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதியப் பேருந்துகளை வாங்கியும் இயக்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.