தமிழகம்

காசி தமிழ் சங்கமத்துக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

கோவை: காசி தமிழ் சங்கமத்துக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காசி தமிழ் சங்கமத்துக்காக இயக்கப்படும் கோவை - வாரணாசி இடையிலான சிறப்பு ரயில் ( எண்: 06105 ), வரும் 19-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, வரும் 21-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

மேலும், வாரணாசி - கோவை இடையிலான சிறப்பு ரயில் (எண்:06106), வரும் 24-ம் தேதி இரவு 11.20 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு, வரும் 27-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். கோவை - வாரணாசி இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06111), வரும் 25-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, வரும் 27-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.

இது தவிர, வாரணாசி - கோவை இடையிலான சிறப்பு ரயில் (எண்:06112), வரும் 30-ம் தேதி இரவு 11.20 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு, வரும் 2024 ஜனவரி 2-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT