ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற் படையினரின் படகு, மீனவர் சூசை ராயப்பன் படகு மீது மோதியது. இதில் சூசை ராயப்பன் விசைப்படகு சேதமடைந்தது.
இதுகுறித்து நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கச்சத்தீவு அருகே 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதியதில் விசைப்படகின் முன்பகுதி சேதமானது. இதில் படகு ஓட்டுநர் முத்துப்பாண்டிக்கு (37) முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக கரை திரும்பினோம்" என்றனர். இதுகுறித்து மண்டபம் மெரைன் போலீஸார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.