தமிழகம்

ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள்களை ஏன் வழங்கக்கூடாது? - யுபிஎஸ்சி-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதித்துள்ள நிலையில் கேள்வித்தாள்களையும் அந்தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேள்வித்தாள்களை மட்டும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்குகிறது. இதனால் கேள்விகளைப் புரிந்து கொண்டு சரியாக பதிலளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவி வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களையும் வழங்க யுபிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீசஸ் உள்பட மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், சிவில் சர்வீஸ் தேர்வுகளை அனைத்து மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கேள்வித்தாள்களையும் அந்தந்த மாநில மொழிகளில் ஏன் வழங்கக்கூடாது என மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT