தமிழகம்

விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் பதில் மனு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த அருண்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அம்பை காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற எனது பற்களை ஏஎஸ்பி பல்வீர்சிங் உடைத்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். அம்பை காவல் நிலையத்தில் மார்ச் 10 , 11-ம் தேதி வரையிலான கண்காணிப்புக் கேமரா காட்சிகளை எனக்கு வழங்கவும், வன்கொடுமை வழக்கில் உரிய இழப்பீடு வழங்கவும், விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதா மற்றும் நெல்லை துணை ஆட்சியரின் விசாரணை அறிக்கையைவழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் “வழக்கின் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மனுதாரர் குறிப்பிடும் நாளில் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படவில்லை. பல்வீர் சிங் உத்தரவின் பேரில் சிசிடிவி கேமரா ஆஃப்செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து துறைரீதியாக விசாரணைநடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அம்பை காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் விசாரணை அறிக்கை கேட்டுமனு தாக்கல் செய்து 3 மாதங்களாகியும், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஏன் இவ்வளவு தாமதம்? இனியும் தாமதிக்காமல், விரைவில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.தவறினால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை டிச. 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT