தமிழகம்

2 பெண்களுக்கு டெங்கு: சிவகங்கையில் மாவட்டத்தில் வேகமாக பரவும் காய்ச்சல்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கையில் 2 பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், முழு வதும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சல் பாதித்த 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் காய்ச்சல் பாதித்த 55 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 23 மற்றும் 30 வயதுள்ள 2 பெண்களுக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட் டத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயா ளிகள் குவிந்து வருகின்றனர். இதையடுத்து சிறப்பு முகாம்கள் மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளிலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இது குறித்து சுகாதார துணை இயக்குநர் விஜய் சந்திரன் கூறுகையில் ‘‘மழைக் காலம் என்பதால் சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. எனினும் காய்ச்சல் பாதித்த பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். கொசு ஒழிப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறோம். இதற்காக மஸ்தூர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT