சென்னை: இருமுடி, தைப்பூச விழாவை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ரயில்நிலையத்தில் 43 விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் இருமுடி மற்றும் தைப்பூச விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த வழியாக செல்லும் விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை (12653), மதுரை பாண்டியன் (12637), செங்கோட்டை பொதிகை (12661), மன்னார்குடி மன்னை (16179), கொல்லம் விரைவு ரயில் ( 16101), தஞ்சாவூர் உழவன் (16865), சேலம் விரைவு ரயில் (22153), மதுரை வைகை (12635) மற்றும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அந்த்யோதயா (20691) ஆகிய 9 விரைவு ரயில்களும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும். இவற்றில் சென்னை எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை தவிர, மற்ற ரயில்கள் இருமார்க்கமாகவும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து இயக்கப்படும் வேறு சில விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த தகவல் சென்னை ரயில்வேகோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.