தமிழகம்

தொல்லியல் பரப்பிலும் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்

செய்திப்பிரிவு

மதுரை: இலக்கியம் மட்டுமின்றி தொல்லியல் பரப்பிலும் ஆர்வம் கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என காமராசர் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கு தொடக்க விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை காம ராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், 2 நாள் தேசியக் கருத் தரங்கம் தொடங்கியது. ஆட்சியர் சங்கீதா தலைமை வகித்தார். துணை வேந்தர் ஜெ.குமார் வாழ்த்திப் பேசினார்.

இதில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: "தலைவர் கருணாநிதிக்கு தொல்லியல் மீது அதிக ஆர்வம் உண்டு. இதுபற்றி தனிப்பட்ட முறையில் நான் நன்றாக உணர்ந்து இருக்கிறேன். தொல்லியல் கல்வெட்டு, தமிழர் பாரம்பரியம் குறித்து பல ஆய்வுகளை நடத்தியவர். கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த 50 ஆண்டு களுக்கு முன்பே அவர் திட்டமிட்டார்.

1970-ல் காவிரிப் பூம்பட்டினம் கடலில் மூழ்கியது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள முன்னெடுத்தவர். தொல்லியல் பற்றி அவரிடம் எதைச் சொன்னாலும், ஒருமடங்கு கூடுதல் தகவல்களை சொல்வார். தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலினும் அகழாய்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். தொல் லியல் ஆய்வுகள் அறிவியல் ரீதி யிலும் இருக்க வேண்டும். அதை உலகம் ஏற்க வேண்டும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

முன்னதாக, தொல்லியல் குறித்த புத்தகங்களை அமைச் சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி வெளியிட்டனர். மேயர் இந்திராணி, எம்எல்ஏக்கள் கோ. தளபதி, பூமி நாதன், திமுக மாவட்டச் செயலர் மணி மாறன், பல்கலைக்கழகப் பதிவாளர் ராம கிருஷ்ணன், தொல்லியல் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT