சென்னை: ரயில்வேயில் முதல்முறையாக கடந்த 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. இந்த அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு.35 சதவீத வாக்குகளும், டி.ஆர்.இ.யு.30 சதவீத வாக்குகளும் பெற்று அங்கீகாரத் தொழிற்சங்கங்களாக தேர்வாகின. 2013-ல் நடந்த தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு. 43 சதவீதவாக்குகளை பெற்று அங்கீகாரத் தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் 2019 ஆண்டுக்கு பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை.
இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் தொடர்ந்த வழக்கில், அடுத்த 4 மாதங்களில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்த கடந்த ஆக. 3-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த தேர்தலை நடத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ரயில்வே சங்க அங்கீகார தேர்தல் விதிகளை உருவாக்க 3 பேர் கொண்ட ஒரு குழுவைரயில்வே வாரியம் அமைத்துள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக ராஜீவ் கிஷோர், உறுப்பினராக அலோக்குமார், உறுப்பினர் செயலாளராக ராஜீவ்காந்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து, அடுத்த 30 நாட்களுக்குள் பரிந்துரையை அளிக்கும். ரயில்வேயின்கீழ் செயல்படும் 17 மண்டலங்களிலும் பணியாற்றும் 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன.