வள்ளியம்மாள், துரைசாமி. 
தமிழகம்

வாணியம்பாடி | சகோதரி உயிரிழந்ததை அறிந்த சகோதரர் மரணம்

செய்திப்பிரிவு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜனதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகண்ணு. இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இவரது மனைவி வள்ளியம்மாள் (104). இவர்களுக்கு தனபால் (80), பழனி (78) என 2 மகன்களும், யசோதா (76), சரோஜா (74), லட்சுமி (72), ஜெகதாம்மாள் (70), ஈஸ்வரி (68) என 5 மகள்களும் உள்ளனர். வள்ளியம்மாளின் சகோதரர் துரைசாமி (102) என்பவரும் அருகாமையில் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். அவருக்கும், 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும், பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த வள்ளியம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் துரைசாமி தனது சகோதரியை பார்க்க விரைந்து சென்றார். உயிரிழந்த நிலையில் இருந்த சகோதரியை பார்த்து கதறி அழுத துரைசாமியும் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த இருவருக்கும் பொதுமக்கள் ஒன்றாக திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரது உடல்களையும் உறவினர்கள் எடுத்துச் சென்று நேற்று நல்லடக்கம் செய்தனர்.

SCROLL FOR NEXT