சென்னை: காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,105 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அதில், கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, வலி பாதிப்பு,காய்ச்சல், சளி, கால்சியம் குறைபாடு உள்ளிட்டபாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது தெரிய வந்தது. அவற்றில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.