பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஜோலார்பேட்டையில் சலசலப்பு: முன்பதிவு பெட்டியில் இளைஞர்கள் அத்துமீறி ஏறியதால் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய பயணிகள்

செய்திப்பிரிவு

ஜோலார்பேட்டை: முன்பதிவு செய்த பெட்டியில் இளைஞர்கள் பலர் அத்துமீறி ஏறியதால், அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை சக பயணிகள் நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கொச்சுவேலியில் இருந்து கொரக்பூர் வரை செல்லும் ரப்தி விரைவு ரயில் நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயில் அங்கிருந்த 3 நிமிடங்களில் புறப்பட தயாரானது. அப்போது, எஸ்-3 பெட்டியில் இருந்த சக பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் அங்கு விரைந்து விசாரித்தபோது, ரப்தி விரைவு ரயிலில் எஸ்-1 முதல் எஸ்- 3 வரை முன்பதிவு செய்த பெட்டியில் 2-ம் வகுப்பில் பயணிக்க கூடிய இளைஞர்கள் பலர் அத்துமீறி ஏறி கழிப்பறை வரை வரிசையாக அமர்ந்து பயணம் செய்ததால் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் கழிப்பறைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கட்டணம் செலுத்தி முன்பதிவு பெட்டியில் பயணித்தாலும்,

2-ம் வகுப்பு டிக்கெட் எடுக்கும் இளைஞர்கள் பலர் முன்பதிவு செய்த பெட்டியில் பயணிப்பது மட்டும் அல்லாமல் கழிப்பறைக்குள்ளே அமர்ந்து பயணிப்பதால் தங்களால் எளிதான பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்பதால் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, எஸ்- 1 முதல் எஸ்- 3 வரையிலான முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். அவர்கள், 2-ம் வகுப்பு பெட்டியை கூடுதலாக இணைத்தால் நாங்கள் ஏன் முன்பதிவு பெட்டியில் ஏறப்போகிறோம் என பதிலுக்கு அவர்கள், ரயில்வே அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதையடுத்து, அனைவரும் 2-ம் வகுப்பு பெட்டியில் கூட்ட நெரிசலோடு, நெரிசலாக ஏற்பட்டனர். அதன் பிறகு 20 நிமிடங்கள் கழித்து ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT