தமிழகம்

தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வில் பழைய வினாத்தாள்: திருவள்ளுவர் பல்கலை.யில் தொடரும் குளறுபடி

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வில் மேலும் ஒரு குளறுபடி ஏற்பட்டுள்ளது. கடந்தஏப்ரல் மாதம் நடைபற்ற பருவத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், மீண்டும் பழைய வினாத்தாள் விநியோகிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 74 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த நவம்பர் முதல் வாரம் பருவத் தேர்வு தொடங்கியது.

இந்நிலையில், முதுநிலை கணிதவியல் துறைக்கான 3-ம் ஆண்டு பருவத்தேர்வில், 2021-ல்வெளியான வினாத்தாள்கள் அப்படியே வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிரவிசாரணை நடத்தி வரும்நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் தற்போது வெளியாகி, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதுநிலை கணிதவியல் இரண்டாம் ஆண்டில் 'ரியல் அனலைசிஸ்' பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாள், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத்தேர்வின்போது அளிக்கப்பட்ட வினாத்தாள் போலவே இருப்பதாகவும், மாதத்தைமட்டும் மாற்றி அச்சிட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்தவிவகாரம் பல்கலைக்கழக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் நடவடிக்கை அவசியம்: பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகள், அவற்றில் காணப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT