திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு சந்தேகமான முறையில் மரணமடைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற மாணவர்களின் சந்தேக மரணம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்பிரபு (25). இவர் டெல்லியில் யுசிஎம்எஸ் கல்லூரியில் எம்.டி மேற்படிப்பு படித்துவந்தார். இந்நிலையில், மருத்துவ மாணவர் சரத்பிரபு டெல்லியில் விடுதியில் இன்று (புதன்கிழமை) காலை மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர் சரத்பிரபு மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள வைரமுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி மருத்துவக் கல்லூரித் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ச்சியான மரணங்கள் ஆரோக்கியமானதில்லை. மாணவர்கள் இறக்கிறார்கள்; மரணங்கள் இறக்கவில்லை. காரணம் கண்டறியப்பட வேண்டும் இந்த வகையில் இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.