கிருஷ்ணகிரி: கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு 4,480 கனஅடியும், கிருஷ்ணகிரி அணையில் விநாடிக்கு 1,290 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆறு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையில் மதகுகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் அலியாளம், எண்ணேகொள்புதூர் உள்ளிட்ட 11 இடங்களில் அமைக் கப்பட்டுள்ள தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. அதன்படி கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 4,480 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 24.93 அடியாக உள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 904 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1,290 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.40 அடிக்கு நீர்மட்டம் உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரத்து முழுவதும் ஆற்றிலும், பாசன கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்வதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றங்கரையை கடக்கவோ, துணிகளை துவைக்க வேண்டாம். கால்நடைகளை ஆற்றின் அருகே கட்டி வைக்க வேண்டாம் என நீர்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையளவு (மிமீ): ராயக் கோட்டை 13, போச்சம்பள்ளி 11, பாரூர் 12.60, அஞ்செட்டி 6, நெடுங்கல் 3 மிமீ மழை பதிவாகி இருந்தது.