சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர்க்கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த அக்.31-ம் தேதி வரை 8.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 81 கோடி உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு தொடர்புடைய பணிகளுக்காக 2.02 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,085 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல செப்.30 வரையில்,37,461 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,334 கோடியும், 3,678 கைம்பெண்களுக்கு ரூ.14 கோடியும், 6,052 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.29 கோடியும் கடனுதவி அளிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் ரூ.128 கோடி தானியஈட்டுக்கடனும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காக கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம்29.55 லட்சம் பேருக்கு ரூ.20,953 கோடி நகைக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு அமைப்பின் கீழ் 6,762 கடன் வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் விரைந்து கடன்வழங்கும் பணியை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கூட்டுறவுத் துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.