பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மனுதாரருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை நிரூபிக்காவிட்டால் கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால், எனது மனு மீது இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆணையத்தின் இந்தச் செயல், இயற்கை நீதிக்கு எதிரானது. எனவே, இந்த மனுவை பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்குவதை எந்த சட்டப்பிரிவு தடை செய்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறல் உள்ளது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், இது விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. சின்னம் ஒதுக்கீட்டில் விதிமீறலை மனுதாரர் நிரூபிக்காவிட்டால் கடுமையான அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT