தமிழகம்

சென்னையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டண உயர்வை குறைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என்று தமிழக அரசு உயர்த்திக் கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

அதாவது வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம், தொழிற்சாலைகளின் தளபரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1076 சதுர அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால், அந்த கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகையை விட தற்போது 2 மடங்காக உயர்ந்திருக்கிறது.

மேலும், கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, மக்களைப் பாதிக்காதவாறு அதை குறைத்து நிர்ணயிக்க சென்னை மாநகராட்சி முன்வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT