சென்னை: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரியும், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நாராயணசாமி பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும், படகுகளை பறிமுதல் செய்தாலும் அப்போது மத்திய இணையமைச்சராக பதவி வகித்த நான் உடனடியாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு பிடிபட்ட மீனவர்களை 24 மணி நேரத்துக்குள்ளும், படகுகளை 48 மணி நேரத்துக்குள்ளும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியில் மீனவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுவது இல்லை.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும். இவ்வாறு பேசினார்.
இதேபோல் புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், மீனவர் காங்கிரஸின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, எம்.பி. விஜய் வசந்த், எம்எல்ஏ-க்கள் பிரின்ஸ், செல்வப்பெருந்தகை, புதுச்சேரி எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.