சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கையின் தொலைநோக்குப் பார்வைக்கான திட்டங்களை நிறைவேற்றவும், அதன் பலன்கள் பெரும்பாலான இளைஞர்களை சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்யவும் யுஜிசி முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அந்தவகையில் குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை பல்கலைக்கழகங்கள் திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு ஏற்ப மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களாகக் கருதப்படும் கல்லூரிகள் ஆகியவற்றின் துணைவேந்தர்களைக் கொண்ட 5 மண்டலக் குழுக்களை யுஜிசி அமைத்துள்ளது.
இந்த குழுவானது வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலம் என 5 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு மண்டலத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான முதல் மாநாடு குஜராத் மாநிலம், பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நாளை (அக்.26) நடைபெற உள்ளது.
மேலும் https://facebook.com//TheMSUBaroda எனும் சமூக வலைதளத்திலும், https://conferencewz.gujgov.edu.in என்கிற இணையதளத்திலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாநாடு நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
உயர்கல்வி நிறுவனங்கள் இந்த நேரடி ஒளிபரப்பில் இணைந்து, தங்களது கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக வளாகத்தில் மாநாட்டை நேரடி ஒளிபரப்பு செய்திட வேண்டும். இது அனைத்து கல்வியாளர்களுக்கு பயனுள்ளதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.