சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளை விடுக்க வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன. இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம்.
கடந்த 10 நாட்களாக சென்னை, அண்ணா நகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிப்பில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மிகாமல் பேருந்துகளை இயக்கி வந்தோம். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 102 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர்.
இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வழியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதற்கு, மண்டல அலுவலகங்களில் குறைந்தபட்சம் 10 ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையே காரணம்.
அதன்படி, தவறிழைக்காத ஆம்னி பேருந்துகளைகூட சிறைபிடித்துள்ளனர். இதனால் முன்பதிவு செய்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பேருந்து சேவை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதே நிலை நீடித்தால் விழா காலங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே, தவறிழைக்காமல் இயங்கும் பேருந்துகளைத் தடை செய்யாமல் அவற்றை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.