தமிழகம்

குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை நிதி திரட்ட 7-ம் தேதி மாரத்தான் ஓட்டம்

செய்திப்பிரிவு

குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக சென்னையில் மாரத்தான் ஓட்டம் சென்னையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா கூறியதாவது:

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 40 சதவீத புற்றுநோய்களுக்கு புகையிலையின் பயன்பாடே முக்கிய காரணம். மருத்துவ தொழில் வளர்ச்சி காரணமாக நோயிலிருந்து உயிர் பிழைப்போர் எண்ணிக்கை அதிகரித்தாலும், சிகிச்சைக்காக நோயாளிகளால் செலவு செய்ய முடியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை வழங்க வேண்டும் என்பது தான் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் நோக்கம். மருத்துவமனையின் தேவைவை நிறைவு செய்ய இம்மருத்துவமனை கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு தாராளமாக நிதி அளித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக நிதி திரட்டும் நோக்கத்தில் நெவில் எண்டவர்ஸ் பவுன்டேஷன் சார்பில், வரும் 7-ம் தேதி சென்னையில் காலை முதல் மாலை வரை ‘டான் டு டஸ்க்’ என்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. அதை ஏற்பாடு செய்துள்ள பவுன்டேஷனின் நிறுவனர் நெவில் ஜே.பிலிபோரியாவின் முயற்சி பாராட்டத்தக்கது என்றார். அதனைத் தொடர்ந்து, நடிகர் அரவிந்த்சாமி, மருத்துவர் சாந்தாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

          
SCROLL FOR NEXT