தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை ரூ.23 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

செய்திப்பிரிவு

ஸ்ரீபெரும்புதூர்: தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மக்களை தேடி மருத்துவ முறைகளின் செயல்பாடுகளை‌ கேட்டு அறிந்தார். மேலும் அங்குள்ள ரத்த சுத்திகரிப்பு மைய பகுதியை பார்வையிட்டு அங்கு இருந்த நோயாளியிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்குவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சிகிச்சைகளுடன் 50 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கூடிய விரைவில் அமைய உள்ளது.

மேலும் சிறுநீரக செயல் இழப்புக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கூடுதலாக ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார். ஆய்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தார்.

SCROLL FOR NEXT