ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் வந்து சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் மீண்டும் சீல் வைத்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.
புதுச்சேரி அருகே தமிழக எல்லையான ஆரோவில் பொம்மியார்பாளையம் இடையே ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ., டிடிவி தினகரனுக்கு சொந்தமான 6 பண்ணை வீடுகள் 7 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
இப்பண்ணை வீட்டில் காவலாளியாக கர்ணன் என்பவர் பணியாற்றிவருகின்றனர். வானூர் அருகே திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலுக்கு வரும் தினகரன் இப்பண்ணைவீட்டிற்கு வந்து தங்கி செல்வது வழக்கம். மேலும் கடந்த சில மாதங்கலுக்கு முன்பு புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை முதலில் இங்கு தங்கவைக்க முடிவெடுக்கப்பட்டு பின்னர் திட்டத்தை தினகரன் ஏனோ மாற்றிக்கொண்டார்.
கடந்த நவம்பர் 9-ம் தேதி காலை 7 மணியளவில் சென்னை- புதுச்சேரி வருமானவரித்துறையின் துணை ஆணையர் வீரகுமார் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கிருந்த ஒரு அறைக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையைச் சேர்ந்த வருமான வரித்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் இப்பண்ணை வீட்டிற்கு வந்து சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் மீண்டும் சீல் வைத்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.
சுமார் 500 மீட்டருக்கு முன்பே ஆரோவில் போலீஸாரை நிறுத்திவிட்டு 3 அதிகாரிகள் மட்டும் இச்சோதனையில் ஈடுபட்டனர். போலீஸாரை அழைத்துச் சென்றால் ஊடகங்களுக்கு தகவல் சென்றுவிடுவதாகவும்,, அதனாலே இந்த நடவடிக்கை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.