கோவை: திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் மறந்தும்கூட காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களை சோனியா, பிரியங்கா காந்தி ஆகியோர் உச்சரிக்கவில்லை என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணியின், வாரிசு பெண் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய சோனியா, பிரியங்கா இருவரும் பெரியார் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி ஆகியோரை மட்டுமே புகழ்ந்து பேசினர்.
சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் முதல்வராக இருந்த ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட ஆர்.வெங்கட்ராமன், பசுமைப் புரட்சிக்கு காரணமான சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக இருந்த இளையபெருமாள் என பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும்,
சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். ஆனால், இவர்களின் பெயர்களை மறந்தும் கூட சோனியா, பிரியங்கா இருவரும் உச்சரிக்கவில்லை. திமுக தலைவர்களைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ் இனி தேசிய பாதையில் பயணிக்காது.
திமுகவின் பிரிவினை பாதையில்தான் பயணிக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர். எனவேதான், கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்களில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கொடுக்காமல் காங்கிரஸை மக்கள் நிராகரித்தார்கள். இனி வரும் தேர்தல்களிலும் நிராகரிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.