சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஒப்பந்தப்படி சீருடை, காலணி, பணப்பை வழங்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நிர்வாக இயக்குநருக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் அனுப்பிய கடிதம்: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டபடி, ஆண்டுக்கு 2 முறை சீருடை வழங்க வேண்டும். நடப்பாண்டுக்கான சீருடை இதுவரை வழங்கப்படவில்லை.
அதேபோல் காலணி பெற தகுதியானோருக்கு இரண்டாண்டுக்கு ஒரு முறை 1 செட் ஷூ, ஆண்டுக்கு 2 செட் காலுறை அல்லது 8 மாத இடைவெளியில் 1 செட் செருப்பு வழங்க வேண்டும். இவை நீண்ட காலமாக வழங்கப்படவில்லை. மேலும், நடத்துநர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைபணப்பை வழங்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்குள் பணப்பை கிழிந்து விட்டால் அதை நிர்வாகத்திடம் ஒப்படைத்து புதிய பணப்பை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக நடத்துநர் பணப்பை வழங்குதலை ஒப்பந்தத்தில் உள்ளவாறு முறையாக அமல்படுத்தவில்லை. எனவே, ஒப்பந்தத்தில் உள்ளபடி, சீருடை, காலணி, பணப்பை போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.