சென்னை: கேரளாவிலும் சமூக நீதியை மையமாக கொண்டு பிரத்யேக கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கை-2020 அமல்படுத்துவதை எதிர்த்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கல்வி பாதுகாப்பு மாநாடு சென்னை லயோலாகல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெ.காந்திராஜ் தலைமை தாங்கினார்.
இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கேரள மாநில உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையில் உள்ள ஒரு அம்சமானது மாணவர்கள் முதலாம் ஆண்டே கல்லூரியைவிட்டு வெளியேற வழிவகை செய்கிறது. இது மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும்.
இதுதவிர கல்விசார் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாகமத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கின்றன. அதனால் மாநிலங்களின் கலாச்சார ரீதியிலான படிப்புகிடைப்பதில் தடை ஏற்படும். ஆராய்ச்சி தலைப்புகள்கூட மத்திய அரசின் தேசிய ஆராய்ச்சி மையம் மூலம் முடிவு செய்யப்படுகிறது.
இதனால் சமீபத்தில் பனாரஸ்பல்கலை. ஆராய்ச்சி மாணவர்கள் மனுஸ்மிருதியை பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மீண்டும் நம்மை வருணாசிரம காலத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது. அதேபோல், தேசிய கல்விஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்(என்சிஇஆர்டி) டார்வினின் பரிணாம கொள்கை மற்றும் வேதியியல் வாய்ப்பாடு ஆகியவற்றை நிராகரித்துள்ளது பெரும் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
சமூக நீதியை பின்பற்றி நாங்களும் ஒரு கல்விக்கொள்கையை வகுத்துள்ளோம். அதன்படி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென கேரள அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.