சென்னை: திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் வரும் 26-ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன.
அதன்படி, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று (அக்.13) முதல் 26-ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலியை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.