தமிழகம்

நர்சரி பள்ளிகளை பதிவு செய்ய விதிமுறைகள்: மாநகராட்சி நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள நர்சரி பள்ளிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

சென்னையில் காளான்போல தனியார் நர்சரி பள்ளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. சிறு குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளிகள் எப்படி இயங்குகின்றன, அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளனவா என்பது குறித்து இதுவரை கவனிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நர்சரி பள்ளி களுக்கான விதிமுறைகளை முடிவு செய்வதற்காக ஒரு குழுவை சென்னை மாநகராட்சி அமைத்திருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:

பள்ளிகளில் குழந்தைகளை தரை தளத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும், இரண்டு வாயில்கள் இருக்க வேண்டும் என்பதுபோன்ற பல விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஆனால் பல இடங்களில் இவை பின்பற்றப்படுவதில்லை. அவற்றை நெறிப்படுத்த வேண்டு மென்றால் முதலில், சென்னையில் இது போன்ற எத்தனை பள்ளிகள் இருக்கின்றன என்பது தெரிய வேண்டும். குழந்தைகளைத்தான், நோய்கள் உடனே தொற்றும் என்பதால், மருத்துவ முகாம்கள் நடத்தும் போதும், நர்சரி பள்ளிகளின் தகவல்கள் மிகவும் அவசியமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டத்தின்படி, அனைத்து நர்சரி பள்ளிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் கூறியிருந்தது. இது குறித்து கல்வியாளர் பாடம் நாராயணன் கூறியதாவது:

நர்சரி பள்ளிகளை கண் காணிப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு, நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அங்கீகாரம் பெறாத தனியார் நர்சரி பள்ளிகளின் தகவல்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பலமுறை முறையிட்டும் அது அமல்படுத்தப்படவில்லை. இதனால், ஏழை மக்கள் ஆங்கில கல்வி வேண்டும் என்பதற்காக தரமற்ற தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். அரசே நர்சரி பள்ளிகளை நடத்தினால்தான் மாணவர்களை தனியார் பள்ளி களில் சேர்ப்பதை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT