சென்னை: ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூரில் பிரான்ஸ் நாட்டின் செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி முதலீடு செய்கிறது. தமிழகத்தில் நல்லாட்சி, சிறப்பான முதலீட்டு சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே இதை கருதுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செயின்ட் கோபைன் நிறுவனத்தின் தலைவர் பியரி ஆன்ட்ரி டி சேலண்டர், தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின் உள்ளிட்ட இயக்குநர்கள் குழுவினரை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்துக்கும், செயின்ட் கோபைன் நிறுவனத்துக்குமான உறவு சுமார் 25 ஆண்டு வரலாறு கொண்டது. ஸ்ரீபெரும்புதூரில் இந்நிறுவனத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 1998 ஜனவரியில் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூரில் செயின்ட் கோபைன் நிறுவனம் பல்வேறு தொழில் திட்டங்களை நிறுவி, சுமார் ரூ.5,000 கோடி முதலீடு செய்து, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது. தனது ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டத்தையும் சென்னையில் அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தில் மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, நகர்ப்புற வனம் ஆகியவற்றை தொடங்கிவைத்து பார்வையிட்டேன். தற்போது இந்நிறுவனம் ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தி திட்டமும், பெரும்புதூர், பெருந்துறை, திருவள்ளூர் திட்டங்களில் விரிவாக்கமும் மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தில் நல்லாட்சி மற்றும் சிறப்பான முதலீட்டு சூழல் அமைந்திருப்பதற்கான அத்தாட்சியாகவே இதை கருதுகிறேன்.
சுமார் ரூ.3,400 கோடி முதலீடு, 1,150 பேருக்கு வேலைவாய்ப்பு என மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். உங்கள் தொழில் முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் அனைவரையும் சென்னையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
பின்னர், அனைவரும் முதல்வர் ஸ்டாலினுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.