திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காய்ச்சல் காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்.முத்தரசன் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அவர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் காய்ச்சல் குறைந்துள்ளதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.