மதுரை: ராமேசுவரத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. தற்போது புதிய பாம்பன் பாலவேலைகள் நடப்பதால் இந்த ரயில் மானாமதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.
பயணிகளின் வசதிக்கென இந்த ரயில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பிரோஸ்புர் கன்டோன்மென்ட் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதன்படி, இந்த ரயில் மானாமதுரையில் இருந்து செவ்வாய்க் கிழமைகளில் இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு வியாழக் கிழமை இரவு 10.45 மணிக்கு அஜ்மீர் சென்று சேரும்.
பின்னர் அஜ்மீரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக் கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பிரோஸ்புர் கன்டோன்மென்ட் சென்றடையும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 7 முதல் பிரோஸ்புர் கன்டோன்மென்ட் - மானாமதுரை வாராந்திர ரயில் (20973) பிரோஸ்புர் கன்டோன்மென்ட்டிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு அஜ்மீர் வந்து சேரும்.
அங்கிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை இரவு 8.15 மணிக்கு மானாமதுரை வந்தடையும். அஜ்மீர் - பிரோஸ்புர் கன்டோன்மென்ட் இடையே கிஷன்கர், ஜெய்ப்பூர், ரிங்காஸ், சிகார், ஸூரு, சதுல்புர், டாஹ்சில் பத்ரா, ஹனுமன்கர்,சங்கரியா, மார்வார், படிண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.