திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கிராம நிர்வாக அலுவலரை வழிமறித்து 2 பேர் தாக்கினர்.
இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் அருகே அய்யாபட்டியைச் சேர்ந்தவர் பிச்சை முத்து (56). சிராவயல் குரூப் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 3 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை திருப்பத்தூர் வந்து விட்டு சிராவயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சிராவயல் குப்பைமேடு பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரை வழிமறித்தனர். பின்னர் கட்டையால் அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்து வமனையில் அனுமதித்தனர். இது குறித்து நாச்சியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர், தேவகோட்டை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அருள் ராஜ் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பிக்கு புகார் அனுப்பினார்.