கரூர் மாநகராட்சி அலுவலக பின் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் காந்தி சிலை. | படம்: க.ராதாகிருஷ்ணன் 
தமிழகம்

கரூரில் கவனிப்பாரின்றி காந்தி சிலை: சமூக ஆர்வலர்கள் வேதனை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி அன்றும் கவனிப்பாரின்றி இருந்த காந்தி சிலையை கண்டு காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.

கரூர் லைட்ஹவுஸ் முனை ரவுண்டானாவில் பீடத்துடன் கூடிய காந்தியின் மார்பளவு சிலை நிறுவப்பட்டிருந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இச்சிலை அகற்றப்பட்டு, அங்கு காந்தியின் முழு உருவச் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து, மார்பளவு காந்தி சிலை கரூர் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் பீடத்துடன் வைக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 3 ஆண்டு களாக பராமரிப்பு இல்லாத நிலையில் பீடத்துடன் கூடிய காந்தி சிலை தனியாகவும், சிலையின் மேற்கூரை கூம்புப் பகுதி தனியாகவும், இரும்புக்கூண்டு தனியாகவும் கிடக்கின்றன.

காந்தி பிறந்த நாளையொட்டி, கரூர் லைட்ஹவுஸ் முனை, ஆசாத் பூங்கா, தாந்தோணிமலை ஆகிய இடங்களில் உள்ள காந்தி சிலைகளுக்கு காங்கிரஸார் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆனால், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலையை காந்தி பிறந்த நாளன்று கூட யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலைக்கு மாலை அணிவிக்கக்கூட முடியாத நிலையில் காந்தி சிலை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் கவனிப்பாரின்றி இருப்பது குறித்து வேதனையும், வருத்தமும் தெரிவித்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள், இங்குள்ள காந்தி சிலையை மீட்டு, சீரமைத்து அதை மாற்று இடத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கரூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபுவிடம் கேட்டபோது, “லைட்ஹவுஸ் காந்தி சிலை அனுமதியின்றி, நோட்டீஸ் கூட வழங்கப்படாமல் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அகற்றப்பட்ட காந்தி சிலை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT