சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்தனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். 50.32% வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக வாக்கு சதவீதம் 13.94% ஆகும்.
கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அதேபோல் 2001-ல் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு சுயேட்சையாக வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரனே சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை விஞ்சிய டிடிவி:
கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுக வேட்பாளாராக களம் கண்ட ஜெயலலிதா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனைவிட 39,544 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.
தற்போதைய இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரைவிட 40,707 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.
ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஜெயலலிதா - சிம்லா முத்துச்சோழன் இடையேயான வாக்குவித்தியாசத்தைவிட அதிகமானதாகும். 1,162 வாக்குகள் டிடிவி அதிகமாகப் பெற்றுள்ளார்.
டெபாசிட் இழந்த திமுக:
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது நிலைமை. ஆனால், மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் திமுக டெபாசிட் இழந்துள்ளது.
நாம் தமிழர், பாஜக கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன. நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
திமுகவுக்கு பின்னடைவே..
தேர்தலுக்கு முன்னதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு பேட்டியின்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் எனக் கூறிய நிலையில் தற்போது திமுக டெபாசிட் இழந்துள்ளது.
திமுகவின் செயல் தலைவராக ஆன பின்னர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் திமுக டெபாசிட் இழப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவே.
15வது சுற்றிலேயே டிடிவி வெற்றி உறுதியானது எப்படி..?
ஆர்.கே.நகரில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் 1,44,260. எஞ்சியுள்ள எண்ணப்பட வாங்கிய வாக்குகள் 32,625.
15-வது சுற்று முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 72,413. மதுசூதனன் பெற்ற வாக்குகள் 38,960. டிடிவி தினகரன் 33,447 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
11.47 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
11.41 AM: 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட டிடிவி தினகரன் 11,816 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
11.40 AM: 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், குக்கர் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9,672 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 5,091 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 737 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 220 வாக்குகள் பெற்றுள்ளார்.
11.30 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் பணநாயகத்தையே உணர்த்துகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். | விரிவான செய்திக்கு |
11.24 AM: 3-வது சுற்று முடிவில் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் 117 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 333 வாக்குகள் கிடைத்துள்ளது. | விரிவான செய்திக்கு |
11.05 AM: 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 15,868 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 7,033 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3,750 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 459 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 117 வாக்குகள் பெற்றுள்ளார்.
10.47 AM: ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தையே ஆர்.கே.நகர் மக்கள் இந்த இடைத்தேர்தலில் பிரதிபலித்திருக்கிறார்கள்- மதுரையில் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். |விரிவான செய்திக்கு |
10.36 AM: இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 5,900 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
10.25 AM:2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10,421, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 4,521, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 2,324, நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 747, பாஜகவின் கரு.நாகராஜன் 173 வாக்குகள் பெற்றுள்ளனர்.
10.05 AM: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. சுமார் 45 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.
9.34 AM: வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக - டிடிவி தரப்பு மோதலை அடுத்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
9.25 AM: நோட்டாவுக்கு 122 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பாஜக வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகளைவிட அதிகமாகும்.
9.20 AM: முதல் சுற்று நிலவரப்படி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 5,339 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 1,182 பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் கரு.நாகராஜன் 66 வாக்குகள் பெற்றுள்ளார்.
9.00 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம், அதிமுக தலைமை அலுவலகம் ஆகியன் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
8.25 AM: தற்போதைய நிலவரப்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடியாவிட்டாலும்கூட சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
38-வது எண் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டு நேதாஜி நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதிகள் உள்ளன.
8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்..
தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ‘விவி பாட்’ இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மாலை 5.10 மணியளவில் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் வாக்குகள் நிலவரம்
| கட்சிகள் | வேட்பாளர்கள் | 19-வது சுற்று வாக்கு நிலவரம் |
| சுயேட்சை | டிடிவி தினகரன் | 89,013 |
| அதிமுக | மதுசூதனன் | 48,306 |
| திமுக | மருதுகணேஷ் | 24,581 |
| நாம் தமிழர் | கலைக்கோட்டுதயம் | 3,802 |
| பாஜக | கரு.நாகராஜன் | 1,368 |
| நோட்டா | 2,348 |