சென்னை: தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, கடின உழைப்பை செலுத்தினால், வெற்றி நம்மைவிட்டு எங்கும் போகாது என்று சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டுநூலக அரங்கில், தமிழக உயர்கல்வித் துறை சார்பில், ‘ஒளிரும்தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்’என்ற தலைப்பில், தமிழகத்தைசேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில், பாராட்டு சான்றிதழ் பெற்ற விஞ்ஞானிகள் பேசியதாவது:
திருவனந்தபுரம் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநர் வி.நாராயணன்: கடந்த 1962-ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரோஇன்று ஆலமரமாக வளர்ந்து மக்களுக்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது. சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது.
லேண்டரில் இருந்து ரோவரை வெளியேகொண்டு வந்து 100 மீட்டர் பயணிக்க செய்தோம். தரையிறங்கிய லேண்டரை கடந்த செப்.3-ம் தேதி 80 மீட்டர் தூரம் உயர்த்தி 40 மீட்டர் தூரம் நகர்த்தி மீண்டும்தரையிறக்கி சாதனை செய்தோம்.வரும், 2047-ல் 100-வது சுதந்திர தினம் கொண்டாடும்போது, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு சந்திரயான்-3 பேருதவியாக இருக்கும்.
இஸ்ரோ கடந்த 60 ஆண்டுகளில் 3,528 சவுண்டிங் ராக்கெட்களை விண்ணில் ஏவியுள்ளது. இதுவரை 125 செயற்கைக் கோள்கள் உள்நாட்டிலேயே வடிவமைத்து விண்ணில் ஏவப்பட்டுள்ளன. 34 நாடுகளுக்காக 431 செயற்கைக் கோள்கள் நம் இந்திய ராக்கெட் மூலம்விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்துக்கு மார்ஸ் ஆர்பிட்டர் மூலம் 68 கோடிகி.மீ. சென்று முதல் முயற்சியிலேயே ஆய்வு செய்த முதல் நாடு இந்தியாதான். வேறு எந்த வல்லரசு நாடுகளும் இதை சாதிக்கவில்லை.
அதில் ஒரு கி.மீ.தூரம் பயணிக்க ஆன செலவு, ஒரு கி.மீ. ஆட்டோ செலவைவிட குறைவு.. வருங்காலத்தில் மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்குஅனுப்பி, அழைத்து வரும் திட்டங்கள் இருக்கின்றன. ராக்கெட்டின் அதிகபட்ச எடையான 9 ஆயிரம்கிலோவை, 19 ஆயிரம் கிலோவாகஉயர்த்தி தயாரிக்க உள்ளோம்.
சந்திரயான்-2 திட்ட இயக்குநர் மு.வனிதா: கடந்த 36 ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றி வருகிறேன். மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் இருக்கும் துறையை தேர்வு செய்து, அதில் நன்கு படித்துநல்ல இடத்துக்கு வரவேண்டும். அதற்கு, அரசு தரும் அனைத்து உதவிகளையும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி: ஆதித்யா, சந்திரயான் ஆகிய திட்டங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு பெரிய சாட்சி. ஆதித்யா-எல்1 திட்டஇயக்குநராக பணியாற்ற எனக்குவாய்ப்பு கிடைத்தது பெருமையானது. ஆதித்யா-எல்1 தற்போது எல்1மையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் கொண்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்: நான் படித்தது அரசுப் பள்ளிதான். எந்த பள்ளியில்படிக்கிறோம் என்பதைவிட, புரிந்துபடிப்பது முக்கியம். படிக்கும்போதேசின்ன சின்ன புராஜெக்ட்களை செய்து பாருங்கள். செய்முறைஅறிவை வளர்த்துக்கொள்வதுடன், புது, புது தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள். சந்திரயான்-2 திட்டத்தில், தோல்வியை பார்த்து பயப்படக் கூடாது என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, கடின உழைப்பை செலுத்தினால், வெற்றி நம்மைவிட்டு எங்கும் போகாது.
சந்திரயான்-3 லேண்டரையும், ரோவரையும் நிலவில் தரையிறக்குவது என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றினோம். இதற்கு நிறையசோதனைகளை செய்தோம். நிலவுபோன்ற சூழலை பூமியில் உருவாக்கி நிறைய சோதனைகளைசெய்தோம். அதுதான் வெற்றிக்குகாரணம். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் முயற்சி இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
எந்த வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். எந்த துறையில் இருந்தாலும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
இந்த விழாவை நேரலையில் காண 58 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் லிங்க்அனுப்பப்பட்டிருந்தது. அதன்மூலம் ஏராளமான மாணவர்கள் நிகழ்ச்சியை நேரலையில் பார்த்தனர். அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.