சென்னை: நீதிமன்றத்துக்கு தவறான தகவல்அளித்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 4 பேர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் உரிய மதிப்பெண்கள் பெற்றும் தன்னை தேர்வு செய்யவில்லை எனக்கூறி திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு உரிய பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்பு செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கரபாண்டியன் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் ஏற்பட்டகுளறுபடிகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மனுதாரருக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உரிய பணி வழங்குவது குறித்து பரிசீலி்க்கப்படும்” என்றார். அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.