சென்னை: தமிழக பதிவுத் துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் நோக்கிலும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் உரிய வகையில் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், பத்திரப்பதிவின்போது, காலியிடம் அல்லது கட்டிடம் ஆகியவற்றுக்கான பதிவுக்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பதிவு கட்டணத்தில் சலுகை பெறும் நோக்கில், கட்டிடம் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், கட்டிடங்களை இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவது கண்டறியப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டது.
இதை தவிர்க்கும் நோக்கில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆடினேட்ஸ் உடன் எடுக்கப்பட்டு அதை ஆவணமாக இணைக்க வேண்டும். இந்த நடைமுறை அக்.1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்தார்.
ஆனால், தொடர்விடுமுறை காரணமாக இந்த நடைமுறை நாளை முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம், பதிவுக்கு வரும் ஆவணங்களுடன் சொத்துக்கள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆடினேட்ஸ் உடன் எடுக்கப்பட்டு இணைப்பது கட்டாயமாகிறது.
இந்த நடைமுறை, நேரடியாக இணையவழி தாக்கல் செய்யப்பட்டு பதியப்படும் ஆவணங்கள், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் கடன் பெறும்போது பயன்படுத்தப்படும் அடமான ஆவணம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணம், வங்கிகள், நிதி நிறுவனங்களால் எழுதிக் கொடுக்கப்படும் ரசீது ஆவணம் மற்றும் உயில் ஆகியவற்றுக்கு பொருந்தாது.