சென்னை: சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை (எம்ஆர்டிஎஸ்) தமிழக அரசிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் மாபெரும் தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. "குப்பை இல்லாத இந்தியா" என்ற கருப்பொருள் அடிப்படையில் நேற்று தூய்மை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
தெற்கு ரயில்வேயில் 360 ரயில் நிலையங்கள், 43 ரயில்வே குடியிருப்புகள், 47 ரயில் பராமரிப்பு மையம் மற்றும் பணிமனைகள், 30 மருத்துவ மையங்கள், ரயில் ஓட்டுநர் அறைகள் உட்பட 1,200 இடங்களில் தூய்மை பிரச்சாரம் நடைபெற்றது. 12,000 தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூரில் தூய்மைப் பணி மற்றும் பிரச்சாரத்தை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தெற்கு ரயில்வே முழுவதும் தூய்மை பணி மற்றும் பிரச்சாரம் நடைபெறுகிறது. சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை (எம்ஆர்டிஎஸ்) தமிழக அரசிடம்கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது வணிகதிட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. எப்போது வேண்டும் என்று தமிழக அரசு கேட்கிறார்களோ அப்போது எம்.ஆர்.டி.எஸ் வழித்தடம் முழுவதுமாக அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வைகை விரைவு ரயில் நேரம் மாற்றம் குறித்து பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். பொதுவாக, தெற்கு ரயில்வேயில் குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, கூடுதலாக சிலரயில்களின் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத்ரயில் சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தூய்மைப்பணி மற்றும் பிரச்சாரத்தில் கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.