வடகிழக்கு பருவமழை தொடங்வதற்கு முன்பாகவே சென்னை புறநகர், செம்பரம்பாக்கம் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி 21.50 அடியை எட்டி உள்ளது. அதன் முழு கொள்ளளவான 23 அடியை விரைவில் அடைந்து விடும் என்பதால் அணை மதகுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

நீர்வரத்து அதிகரிப்பால் 21 ஏரிகள் நிரம்பின: நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும், சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் என மொத்தம் 1,022 ஏரிகள் உள்ளன. இவற்றில் 38 ஏரிகள் நிரம்பியுள்ளன.

வெளி மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மொத்தம் 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடிக்கு நீர் வந்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் விரைவில் ஏரி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏரி மதகுகள் பராமரிப்பு பணி நேற்று நடைபெற்றது. மதகுகளுக்கு கீரீஸ் தடவி ஆயத்தமாக வைத்துள்ளனர். ஏரி முழு கொள்ளளவை எட்டிய உடன் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இன்னும் பருவ மழை தொடங்காத நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை இல்லை. இருப்பினும் அருகாமையில் உள்ள மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT