108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் சிசுவுடன் மருத்துவ உதவியாளர் பிரபு. 
தமிழகம்

தி.மலை அருகே 4 மணி நேர இடைவெளியில் ஒரே 108 ஆம்புலன்ஸில் 2 பெண்களுக்கு பிரசவம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மாதப்பூண்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜமாணிக்கம் மனைவி சரண்யா (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 26-ம் தேதி நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவலின் பேரில், ஆவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ், சரண்யா வீட்டுக்கு சென்றது. ஓட்டுநர் கார்த்திகேயன் ஓட்டிச் சென்றார். மருத்துவ உதவியாளர் பிரபு உடன் சென்றார். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணி சரண்யாவை அழைத்து கொண்டு விரைந்தனர்.

சோமாசிபாடி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது, பிரசவ வலி அதிகரிக்கவே சரண்யாவுக்கு மருத்துவ உதவியாளர் பிரபு, பிரசவம் பார்த்துள்ளார். இதில், அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல். திருவண்ணாமலை அடுத்த சே.பேட்டை கிராமத்தில் வசிப்பவர் தங்கமணி மனைவி ஆண்டாள் (29). பிரசவ வலியால் துடித்த இவரை, மருத்துவ உதவியாளர் பிரபு மற்றும் ஓட்டுநர் கார்த்திகேயன் ஆகியோர் 108 ஆம்புலன்ஸில் கடந்த 26-ம் தேதி இரவு அழைத்துக் கொண்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர்.

வட ஆண்டாப்பட்டு அருகே வந்த போது பிரசவ வலி அதிகரித்ததால், ஆண்டாளுக்கு மருத்துவ உதவியாளர் பிரபு பிரசவம் பார்த்துள்ளார். இதில், பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய், சேய் இருவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே நாளில் ஒரே ஆம்புலன்ஸில் 2 பெண்ளுக்கு பிரசவம் பார்த்து 2 பெண் குழந்தைகளை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்த மருத்துவ உதவியாளர் பிரபு, ஓட்டுநர் கார்த்திகேயன் ஆகியோருக்கு மருத்துவ பணியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT